செந்தில்பாலாஜி உடல்நிலை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அப்டேட்

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி எத்தனை நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் தான் தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகத்தினை ( HI- TECH COMPUTER LAB ) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், "நேற்றுதான் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நலமாக இருக்கிறார். நேற்று மாலையே சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவப் பிரிவுக்கு (post operation ward) மாற்றப்பட்டார். அவர் எத்தனை நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதெல்லாம் மருத்துவர்கள்தான் கூற வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில், இதயத்துக்கு 24 மணி நேரம் ஓய்வு தேவை என்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரத்துக்குப் பின் ஆக்சிஜன் உதவியுடன் சுவாசிப்பார். அதன்பின் செயற்கை சுவாசம் முழுவதுமாக நீக்கப்பட்டு, இயற்கையாக சுவாசிக்க துவங்குவார். அதன் பின்னர் இதயம் படிப்படியாக தாமாகவே செயல்பட தொடங்கும். அதுவரை ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு இதய துடிப்பின் அளவு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். 24 மணி நேரத்துக்குப் பின் வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு, அவருக்கு திரவு உணவு வழங்கப்பட உள்ளது என்று தெரிகிறது.

இதனிடையே, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில், அமலாக்கத் துறையினருக்கு, காவல் துறை அதிகாரிகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில், செந்தில்பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை எப்படி அனுமதி கோர முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் விவரம்: செந்தில்பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க ED எப்படி அனுமதி கோர முடியும்? - உயர் நீதிமன்றத்தில் வாதம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE