விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் பணி தொடரக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: கையகப்படுத்திய நிலங்களுக்குரிய இழப்பீடு வழங்காமல் கொள்ளிடம் ஆற்றில் பாலத்துடன் கூடிய கதவணை கட்டுமானப் பணியை தொடரக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம், கடலூர் மாவட்டம் ஆதனூர் இடையே பாலத்துடன் கூடிய கதவணை கட்ட அரசு ரூ.400 கோடி ஒதுக்கியது. இத்திட்டத்துக்காக கொள்ளிடம் ஆற்றின் கரையில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி சுந்தரவிமலநாதன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் 2021-ல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் நிலம் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 12 வாரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை நிறைவேற்றாததால் தஞ்சை, நாகை, கடலூர் ஆட்சியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. ஆனால், கையகப்படுத்திய நிலங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், விவசாய நிலங்களை சட்டப்படி கையகப்படுத்தாமல் அந்த நிலங்களில் நுழைய அரசுக்கு உரிமையில்லை. இதனால் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலத்துடன் கூடிய கதவணை கட்டுமானப் பணிக்கு தடை விதிக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்தப்படாமல் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது குறித்து நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், மயிலாடுதுறை, 'கடலூர் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தல் முடிந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் முடியவில்லை' என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ''கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய இழப்பீடு வழங்கப்படாமல் அந்த நிலங்களில் எந்தப் பணியும் தொடர அனுமதிக்க முடியாது'' என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE