வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை: அமைச்சர் தங்கம் தென்னரசு

By செய்திப்பிரிவு

சென்னை: வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ரவி, பத்தாயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று பேசியிருந்தார். சனாதன தர்மத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதன தர்மத்துக்கு ஆதரவாளராக ஆளுநர் பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இது தொடர்பாக தமிழக நிதி, மின்சாரம் மற்றும் மனிவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்துக்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், “தா்ம ரட்சராகப்“ புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழக ஆளுநர் ஈடுபட்டிருக்கிறார்.

தமிழ்ப் பண்பாடும் - விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன. மத்திய அரசின் “தனிப்பெருங் கருணை“ ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE