சென்னை: செந்தில்பாலாஜியின் கைதுக்கான காரணங்களை தெரிவிப்பது அடிப்படை உரிமை என்று உயர் நீதிமன்றத்தில் மனைவி மேகலா தரப்பினர் வாதிட்டனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்து ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் போது, அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடுகையில்," அமைச்சரின் கைது சட்டவிரோதம் இல்லை என்றால் ஆட்கொணர்வு வழக்கு தேவையில்லை ஆனால், இதில் சட்டவிரோத நடவடிக்கை உள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்ததற்கான காரணங்களை தெரிவித்திருக்க வேண்டும். அது அடிப்படை உரிமை.
அமைச்சரின் கைது குறித்த தகவலும், கைதுக்கான காரணங்களையும் தெரிவிப்பது அடிப்படை உரிமை. இதை அரசியல் சாசன பிரிவு 15 A-வில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றக் காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானதாக இருந்தால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை இடைக்கால உத்தரவாக கருத முடியாது." என்று வாதிட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.