சென்னை: தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக தலைமைச் செயலராக பணியாற்றி வருகிறார் இறையன்பு. கடந்த 1988-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் 3 பேரின் பெயர்கள் பரவலாகப் பேசப்படுகிறது.
இதில் முதலில் இருப்பவர் தற்போதைய தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள 1986-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா. இவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக (டிக்) தலைவராக உள்ளார். அடுத்தது, 1989-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.கே.பிரபாகர். இவர் தற்போது வருவாய்த் துறையின் கீழ்வரும் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார். மூன்றாவதாக உள்ளவர் 1989-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலராக உள்ளார்.
இவர்களில் ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்தாண்டு மே மாதமும் சிவ்தாஸ் மீனா அடுத்தாண்டு அக்டோபரிலும் ஓய்வு பெறுகின்றனர். எஸ்.கே.பிரபாகர் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெறுகிறார்.
» தொண்டுள்ளத்தோடு விஜய் வந்தால் வரவேற்கலாம் - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து
இவர்களில் பெரும்பாலும், சிவ்தாஸ் மீனாவே தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் அடுத்த தலைமைச் செயலர்யார் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.