ஆரோக்கியம் தரும் யோகாவை அனைவரும் இளம் வயதிலேயே கற்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

By அ.முன்னடியான்

புதுச்சேரி: ஆரோக்கியத்தை தரும் யோகாவை அனைவரும் இளம் வயதிலேயே கற்றுக்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை, இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் மற்றும் புதுச்சேரி மாசுக் கட்டுபாட்டுக் குழுமம் ஆகிய துறைகள் இணைந்து நடத்திய 9-வது சர்வதேச யோகா தின விழா புதுச்சேரி உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விழாவினை தொடங்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி, தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, சுற்றுலாத்துறை செயலர் மணிகண்டன், கல்வி மற்றும் சுற்றுலாத்துறை இயக்குநர் பிரியதர்ஷினி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். இதில், முக்கிய நிகழ்வாக யோக வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற "பெருந்திரள் யோகா செயல் விளக்க நிகழ்ச்சி" நடத்தப்பட்டது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: ''யோகா இப்போது சர்வதேச அளவில் பிரபலமடைந்து எல்லோராலும் வரவேற்கத்தக்கதாக இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் நம்முடைய பிரதமர். யோகா சுயக் கட்டுப்பாடு, ஒழுக்கம், மனநிலையை அமைதியாக வைத்திருப்பது, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது, உடலும், மனதும் இணைந்திருக்க செய்வதாகும். ஒரு மனிதனுக்கு ஆரோக்கிமான வாழ்வு என்பது மிக முக்கியமான ஒன்று.

ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற்பயிற்சி, யோகா அவசியம். உணவு கட்டுப்பாடு மிக முக்கியம். இதெல்லாம் ஒருங்கிணைந்து வருகின்ற நிலையில் யோகா இருப்பதை பார்க்கின்றோம். இது இந்த பயிற்சியை இளம் வயதிலிருந்து எடுத்து வருபவர்களுக்கு நன்றாக தெரியும். இதில் எத்தனையோ முறைகள் இருக்கின்றது. அத்தனை முறையும் நாம் வாழ்க்கையில் கோபம் கொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. கோபம் வந்தால் மன அழுத்தம் அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இவை இல்லாமல் மனிதனை அமைதியாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவுவது இந்த யோகா. யோகா பயிற்சி எடுத்துக்கொண்டால் இளமையாக இருப்பதை பார்க்கலாம். யோகா செய்யவதற்கு பழகிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் நாம் அனைவரையும் வலியுறுத்தும் வகையில் பிரதமர் உலகளவில் பெரிதும் வரவேற்கத்தக்கதாக பல்வேறு யோகா நிகழ்ச்சிகளில் நடத்தி கலந்து கொண்டுள்ளார்.

இன்று சர்வதேச நிலையில் அவர் நடத்துவதை பார்த்தால் அது எவ்வளவு முக்கியமாகனது என்பதை நாம் அறிய முடிகிறது. இந்தவிழாவில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு இளம் வயதில் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணி இருப்பது வரவேற்கத்தக்கது. ஆரோக்கியத்தை தருவது யோகா. ஆகவே அனைவரும் இளம் வயதிலேயே யோகாவை கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE