சென்னை மண்டலம் 138, மதுரை 125, திருச்சி 100 - தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நாளை (ஜூன் 22) முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 138 கடைகள் மூடப்படுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அத்துறை அமைச்சர், தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 5,329 டாஸ்மாக் மதுபானக் கடைகளில், விதிகளுக்கு அப்பாற்பட்டு அதாவது பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் கடைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்துக்கு உள்ளே இருக்கும் கடைகள், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் கடைகளை கணக்கெடுக்கும்படி உத்தரவிடப்பட்டது.

இதன்படி, 500 கடைகளை நாளை முதல் (22.6.2023) மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நாளை முதல் (22.6.2023) செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை மண்டலத்தில் 138 கடைகள், கோவை மண்டலத்தில் 78 கடைகள், மதுரை மண்டலத்தில் 125 கடைகள், சேலம் மண்டலத்தில் 59 கடைகள், திருச்சி மண்டலத்தில் 100 கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் அறிவிப்பு விவரம்: முதல்வரின் உத்தரவுக்கு இணங்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேற்படி, அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட 20.04.2023 நாளிட்ட அரசாணை எண்.140, மதுவிலக்கு உள் மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது.

மேற்படி, அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளைக் கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 22.6.2023 முதல் செயல்படாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அன்புமணி வலியுறுத்தல்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும். தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதை நோக்கிய பயணத்தின் தொடக்கமாக இது அமைய வேண்டும்.

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இரு மாதங்களுக்கு மேலாகியும் அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. சட்டப்பேரவையில் அறிவித்தவாறு மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். அதன் பயனாக நாளை முதல் 500 மதுக்கடைகள் மூடப்படவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மூடப்படும் மதுக்கடைகள் தவிர மீதமுள்ள 4829 மதுக்கடைகளும் படிப்படியாக மூடப்பட்டு தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். காலாண்டுக்கு 500 மதுக்கடைகள் மூடப்பட்டால், அடுத்த இரண்டரை ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கு சாத்தியமாகி விடும். அதற்கேற்றவாறு உடனடியாக கால அட்டவணையை தயாரித்து வெளியிடுவதுடன், அதனடிப்படையில் மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE