மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெறும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் இதய அறுவை சிகிச்சை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்று (ஜூன் 21) அதிகாலை ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை தொடங்கியது. இதய அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ரகுராம் தலைமையிலான 6 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. தனியார் மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், "அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு முக்கியமான மூன்று ரத்தக்குழாய்களில் தீவிர அடைப்பு உள்ளது. அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளை நிறுத்தி சில தினங்களுக்கு பின்பே இதய அறுவை சிகிச்சை செய்ய முடியும். இல்லையென்றால், ரத்தக் கசிவு ஏற்படும். அதனால், 5 நாட்கள் அறுவை சிகிச்சை தள்ளிப்போனது.

நாளை (இன்று) அதிகாலை அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கான முழு தகுதியைப் பெற்றுள்ளார்" என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, அமைச்சர் செந்தில்பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறைதாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE