பக்ரீத் பண்டிகையொட்டி திருப்புவனத்தில் களை கட்டிய ஆட்டுச் சந்தை - ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை

By இ.ஜெகநாதன்


திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பக்ரீத் பண்டிகையொட்டி ஆட்டுச் சந்தை களை கட்டியது. இதில் ரூ.1 கோடி மேல் ஆடுகள் விற்பனையானது.

திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை ஆட்டுச் சந்தை நடக்கிறது. அதன்படி நேற்று அதிகாலையில் நடைபெற்ற சந்தையில் மதுரை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளாடு, செம்மறி ஆடு என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன.

ஆடுகளை வாங்க, உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். மேலும் ஆடுகளின் விலையும் அதிகரித்திருந்தது. எடைக்கு ஏற்ப ஒரு ஆடு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலைபோனது.

இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், "ஜூன் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகை வருகிறது. இதனால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு, விலை அதிகரித்தது. ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்ததால், விற்பனை ரூ.1 கோடியை தாண்டியது’’ என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE