அரசு போக்குவரத்துக் கழக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை முறையாக நிரப்ப வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"திமுகவின் தேர்தல் அறிக்கை எண் 180-ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பினை முக.ஸ்டாலின் பெற்றுக் கொடுத்துள்ளார் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்தும் அரசுத் துறைகளிலோ அல்லது பொதுத்துறை நிறுவனங்களிலோ வேலைவாய்ப்பினை வழங்க இயலாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வேலைவாய்ப்பினை வழங்கினார் என்று சொல்வது "கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவானாம்" என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது.

அரசுத் துறைகளிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பொதுத் துறைகளிலும் காலியாக உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல், வெளிமுகமை மூலம் ஆட்களை நியமிப்பது, ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிப்பது, ஓய்வு பெற்றவர்களை பணியில் அமர்த்துவது போன்ற தொழிலாளர் விரோத, இளைஞர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத்தான் திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்து வருகிறது. அதே சமயத்தில், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதாக மத்திய அரசை குற்றம்சாட்டுவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

தமிழகத்தில் உள்ள அரசுப் போக்குவத்துக் கழகங்களில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர், நடத்துநர், கம்மியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக, பேருந்துகள் இருந்தும் அவற்றை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத நிலை நிலவுகிறது. தமிழகத்தில் கனரக வாகன உரிமம் பெற்று, சாலைப் போக்குவரத்து நிறுவனத்தில் முறையாக பயிற்சி பெற்ற இலட்சக்கணக்கான இளைஞர்கள் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநராகவும், நடத்துநராகவும், கம்மியராகவும் பணியாற்ற காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து இருக்கிறார்கள். இவர்களை வைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலுள்ள காலிப் பணியிடங்களை முறையாக, நிரந்தரமாக, வெளிப்படைத் தன்மையுடன் பணியமர்த்த திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசின் இந்த நடவடிக்கை இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதித்துள்ளது.

இந்த நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்ப அண்மையில் முடிவு செய்யப்பட்டு, அதன்படி அவர்கள் பணியிலும் அமர்த்தப்பட்டார்கள். திமுக அரசின் இந்தச் செயலுக்கு நான் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து, தற்போது ஓய்வு பெற்ற ஓட்டுநர், நடத்துநர்களை குறைந்த அளவு தொகுப்பூதியத்தில் பணியமர்த்த திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. திமுக அரசின் இந்த இளைஞர் விரோத, தொழிலாளர் விரோதப் போக்கிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து மத்திய அரசை குறை கூறுவதற்கு முன்னர், தமிழகத்தில் காலியாக உள்ள லட்சக்கணக்கான அரசுப் பணியிடங்களை, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை இளைஞர்களைக் கொண்டு நிரந்தரமாக நிரப்பி, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை திமுக அரசு செய்தாலே, ஐந்து இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேலோங்கும்.

வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து மேடைக்கு மேடை பேசும் முதல்வர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 25,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை இளைஞர்களைக் கொண்டு, நேர்மையான முறையில், வெளிப்படைத் தன்மையுடன் நிரந்தரமாக நிரப்பிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE