மின் துறை செயலராக பீலா ராஜேஷ் நியமனம் - 12 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத் தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழக நில சீர்திருத்த துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ், மின்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு முயற்சிகள் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் (டிஆர்டிஏ) திட்ட அலுவலர் வீர் பிரதாப் சிங், சென்னை வணிக வரிகள் துறை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராகவும், சேலம் பட்டுப்புழு வளர்ச்சி துறை இயக்குநர் ஜெ.விஜயா ராணி, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் ஆணையராகவும், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) மேலாண் இயக்குநர் எம்.ஆசியா மரியம், சிறுபான்மையினர் நல இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊரக வளர்ச்சி துறை இணை செயலர் சந்திரசேகர் சாகமுரி, பட்டுப்புழு வளர்ச்சி துறை இயக்குநராகவும், தமிழ்நாடு சிறுதொழில் கழக தலைவர் எஸ்.விஜயகுமார், தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன (டுபிசெல்) தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். எஸ்.விஜயகுமார், அடையாறு - கூவம் ஒருங்கிணைந்த சீரமைப்பு திட்ட சிறப்பு பணி அதிகாரியாகவும் பணியாற்றுவார். டுபிசெல் தலைவராக இருந்த எஸ்.ஸ்வர்ணா, தமிழ்நாடு சிறு தொழில் கழக தலைவராகவும், நீர்வள ஆதாரதுறை கூடுதல் செயலர் ஆர்.கண்ணன், தமிழ்நாடு சிமென்ட் கழக மேலாண் இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளத் துறை துணை செயலர் ரஞ்சித் சிங், நாகப்பட்டினம் மாவட்ட டிஆர்டிஏ திட்ட அலுவலராகவும், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் டி.எஸ்.சுரேஷ்குமார், தமிழ்நாடு காதி,கிராம தொழில் கழக தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்ட டிஆர்டிஏ திட்ட அலுவலர் பி.அலர்மேல் மங்கை, சேலம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE