இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜியை நியமித்த அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜியை நியமித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில்பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பார் என கடந்த 16-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “அமைச்சராக ஒருவரை நியமிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரம். நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதிக்காதது சரியானது.

ஜாமீன் கோரி நீதிமன்ற காவலில் உள்ள செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், அவரால் அமைச்சரவை கூட்டங்களிலும் கலந்து கொள்ள முடியாத நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது சட்ட விரோதமானது.

நீதிமன்ற காவலில் உள்ளவர் அமைச்சரவையில் நீடிக்கலாமா? கூடாதா? என்பது குறித்து நீதிமன்ற தீர்ப்புகள் எதுவும் இல்லை. செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க அனுமதிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு விரோதமானது.

எனவே, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்ற அரசாணையை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும். அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE