சென்னை: சென்னையில் மழை பாதிப்பு பெரிய அளவுக்கு இல்லை என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை மாநகரம் முழுவதும் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள பிரதான சாலையில் 40 வருட பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கிண்டி, வேளச்சேரி, வடபழனி உள்ளிட்ட பகுதிகள் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் மழை பாதிப்பு மீட்புப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, "சென்னையில் இதுவரை பெரிய அளவுக்கு மழை பாதிப்பு இல்லை. தொடர்ந்து அதிகாரிகளுடன் மழை பாதிப்பு தொடர்பாக பேசி வருகிறேன். தாழ்வான பகுதிகளை கண்காணிக்க அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.