சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: கொடுங்கையூர் போலீஸார் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து தகாத வார்த்தைகளில் பேசியதால், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுக பேச்சாளர்களில் ஒருவரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து தகாத வார்த்தைகளில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பலரும் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்கு நடிகை குஷ்பு கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.மேலும், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. உங்கள் வீட்டுப் பெண்களை இப்படி பேசுவீர்களா? உங்கள் மொழியிலேயே என்னால் பதில் கொடுக்க முடியும். ஆனால் அப்படிச் செய்தால் அது என் அம்மாவை அசிங்கப்படுத்துவதற்கு சமம். என் வளர்ப்பை நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை. இது போன்ற செயல்கள் சரியா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீஸார், 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளதாக முதல்கட்டமாக தகவல்கள் வெளியாகி உள்ளது. | வாசிக்க > சர்ச்சைப் பேச்சு | திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நிரந்தர நீக்கம் - துரைமுருகன் அறிவிப்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE