சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை - உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை என அதிருப்தி தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதில் உண்மையிலேயே தமிழக அரசுக்கு ஆர்வம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் தாக்கல் செய்திருந்த வழக்குகள் மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலும், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 500 ஹெக்டேர் பரப்பளவிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதை படித்துப் பார்த்த நீதிபதிகள், ‘‘சீமைக்கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே அவை மீண்டும் வளராமல் தடுக்கப்படும். இதுதொடர்பாக குழுக்கள் அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அதிகாரிகள் இதுவரை அமல்படுத்தவில்லை. குறிப்பாக, சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விஷயத்தில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை’’ என அதிருப்தி தெரிவித்தனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு: பி்ன்னர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுவது என அரசு கொள்கை முடிவு எடுத்த பிறகும்கூட, அதுதொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை எனும்போது, இந்த விவகாரத்தில் உண்மையிலேயே தமிழக அரசுக்கு ஆர்வம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

விரைவில் குழுக்கள்: அப்போது அரசு தரப்பில், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் குழுக்கள் அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜூலை 5-ம்தேதிக்குள் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும், இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என எச்சரித்து, விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE