பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழிகாட்டுதல் ஜூலைக்குள் வெளியீடு - உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

By செய்திப்பிரிவு

மதுரை: தமிழகத்தில் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்கள் ஜூலை மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த வெயில் செல்வி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நானும், என் கணவர் மாடசாமியும் இந்து காட்டு நாயக்கன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனது மகள் துர்கா தேவி 11-ம் வகுப்பு படிக்கிறார். அவரின் கல்வி மற்றும் அரசின் சலுகைகளுக்காக, ஆன்லைனில் சாதிச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தோம். ஆனால், முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

மீண்டும் அனைத்து ஆவணங்களையும் இணைத்து, சாதிச் சான்றிதழ் கேட்டு 2022-ல் விண்ணப்பித்தோம். அந்த விண்ணப்பத்தையும் அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். அதிகாரிகளின் உத்தரவை ரத்து செய்து, என் மகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "தமிழகத்தில் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் தொடர்பாக சட்டம் அல்லது விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதா?" என கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அரசு வழக்கறிஞர், "பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவது குறித்த வழிகாட்டுதல்கள் வரும் ஜூலை மாத இறுதிக்குள் வெளியிடப்படும்" என்றார்.

இதையடுத்து, கடையநல்லூர் வருவாய்க் கோட்டாட்சியருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதிகள், "மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் விண்ணப்பத்தை 30 நாட்களில் விசாரித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE