பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பு - 'லியோ' குறித்து விஜய்க்கு அன்புமணி கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வர வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது.

புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துவிட்டன.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நா ரெடி’ பாடல் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE