சென்னை: "அமைச்சரவை மாற்ற பரிந்துரையில்,ஆளுநர் தலையிடுவதும் விமர்சிப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா? என்ற அய்யம் எழுகிறது" என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
"அமைச்சர் செந்தில்பாலாஜி நிர்வகித்து வந்த துறைகளை இரு வேறு அமைச்சர்களிடம் ஒப்படைப்பதற்காக ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதனை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.இது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் அடாவடிப் போக்காகும். அமைச்சர்கள் யார் யார் ? அவர்களுக்கு என்னென்ன துறைகள்? என்பனவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வருக்கே உண்டு.
இதில் ஆளுநர் தலையிடுவதும் விமர்சிப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா? என்கிற ஐயம் எழுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, "முதல்வர் சொல்பவரைத் தான் அமைச்சராக ஆளுநர் நியமிப்பார். அதுதான் அவரது வேலை. அவரைக் கேட்டுதான் துறைகளை மாற்ற வேண்டும் என்பதில்லை. துறைகளை மாற்றியிருப்பதாக ஆளுநருக்கு தெரிவிக்க வேண்டும். அதன்படி தெரிவித்தோம். அரசமைப்புச் சட்டம் தெரிந்த ஆளுநராக இருந்திருந்தால், அவர் இந்த மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் ஆளுநரோ, ‘‘முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணம் தவறாக வழிநடத்துவதாகவும், தவறானது’’ எனவும் கூறி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இது மிகவும் தவறானது" என்று கூறியிருந்தார். | விரிவாக வாசிக்க > அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்ற விவகாரம் - ஆளுநருக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதாக பொன்முடி தகவல்