காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்துக்காக இன்று காலை (16-ம் தேதி) கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் இன்று (16ம் தேதி) காலை தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு வந்தடைந்தது. கல்லணைக்கு வந்த தண்ணீரை காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் மதகுகள், ஷட்டர்கள் ஆகியவை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது .

இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு, கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துகாக தண்ணீர் திறந்து வைத்து, நவதானியங்கள் மற்றும் மலர்களைத் துாவினர். இதன் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், ஆகிய மாவட்டங்களில், 3.42 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.

முன்னதாக, கல்லணையில் உள்ள அகத்தியர் சிலை, ஆஞ்சநேயர் சிலை, காவிரி அன்னை சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலை, கரிகால சோழன் சிலை ஆகிய சிலைகளுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காணப்பட்டது. இந்த சிலைகளுக்கு அதிகாரிகள் மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.

முன்னதாக கல்லணையில் உள்ள விருந்தினர் மாளிகையில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எம்பிக்கள் எஸ். எஸ். பழநிமாணிக்கம், செ.இராமலிங்கம், எஸ். கல்யாணசுந்தரம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் திருவாரூர் நாகை மயிலாடுதுறை திருச்சி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட நீர்வளத் துறையின் அதிகாரிகள், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE