அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுக்கு அரசியல் ரீதியாக பாஜக மீது பழி போட முயற்சி: வானதி சீனிவாசன்

By செய்திப்பிரிவு

கோவை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு அரசியல் ரீதியாக பாஜக மீது பழிபோட பார்க்கிறார்கள் என வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்ததற்கு, முதல்வர் உட்பட திமுக, கூட்டணி கட்சிகள் கண்டன அறிக்கை வெளியிடுவதும், கண்டன கூட்டம் நடத்துவதும் பாஜகவை, பிரதமரை விமர்சிப்பதும் இந்த கைதுக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிதான் காரணம் என மக்கள் முன்பாக தவறான கருத்தை பரப்புவதாகும்.

மிரட்டி பார்க்க முடியாது, பணிய வைக்க முடியாது என தெரிவிப்பது, தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தையா அல்லது பாஜக அரசையா என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்ல வேண்டும். அரசியல் ரீதியாக பாஜக மீது பழிபோட முடியுமா என பார்க்கிறார்கள். அமலாக்கத்துறை விசாரணை என்பது உச்ச நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது.

அந்த விசாரணை முறையாக, நேர்மையாக நடப்பதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென்பது கடமை. எந்த குற்றம் செய்திருந்தாலும், யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் இருந்து தமிழக முதல்வர், அமைச்சர்கள் வெளியே வர வேண்டும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டியதை அவர்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.

மத்திய அரசின் ஒவ்வொரு துறையும் சுதந்திரமாக இயங்கி வருகிறது. அவர்களுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது. ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE