சென்னை: ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டார்.
ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது. இதையடுத்து, நேற்று மாலை முதலே காவேரி மருத்துவமனையின் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஓமந்தூரார் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்தன. தொடர்ந்து, காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி மேற்பார்வையில் சிறைத்துறை போலீஸார் செய்திருந்தனர்.
குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருப்பதால் இரு மருத்துவமனைகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இரவு 9.15 மணியளவில் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து இரு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாகவும், போலீஸாரின் பாதுகாப்புடனும் காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கொண்டு செல்லப்பட்டார்.
சுமார் 8 நிமிடங்களில் காவேரி மருத்துவமனையை ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடைந்த நிலையில், செந்தில் பாலாஜி மருத்துவமனைக்குள் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அமைச்சரின் தற்போதைய உடல் நிலை பரிசோதிக்கப்பட்ட பிறகு, அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை மருத்துவர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.