தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத் துறை, முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை - தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு பரிந்துரை

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆகிய துறைகளை தங்கம் தென்னரசு மற்றும் சு.முத்துசாமி ஆகியோருக்கு வழங்க அரசு சார்பில் ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.

பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்காமல் மோசடி செய்தது, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் 13-ம் தேதி இரவு கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வரும் 28-ம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகிய துறைகளை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

முதலில், மின்துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை அமைச்சர் ஐ.பெரியசாமியிடமும் வழங்க ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அடுத்தகட்ட ஆலோசனையில், மின்துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை, வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடமும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது என்றும் முடிவுவெடுத்து இதுகுறித்து ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சில விளக்கங்களைக்கேட்டு இந்த பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE