செந்தில்பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை 

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின், மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நேற்று பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 28-ம்தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையில், செந்தில்பாலாஜியை சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் கோரியும் அவரது மனைவி மேகலா சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் செந்தில்பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேற்று முறையீடு செய்தார்.ஆனால் நீதிபதி ஆர்.சக்திவேல் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று தெரிவித்ததால், நேற்று மாலை இதுகுறித்து தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா முன்னிலையில் முறையிடப்பட்டது.

இதையடுத்து, நேற்று மாலை வேறு ஒரு அமர்வில் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், செந்தில்பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று, நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் செந்தில்பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்து ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE