சென்னை: அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய இஎஸ்ஐ மருத்துவக் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடைபெற்றது. இந்த சோதனை முடிவில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதயத்துக்குச் செல்லும் 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையின் இருதயவியல் துறையின் 4 மூத்த மருத்துவர்கள் கொண்ட குழு செந்தில்பாலாஜியின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய இஎஸ்ஐ மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.
முன்னதாக, தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் கரூர் மற்றும் சென்னையில் உள்ள வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதையடுத்து, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
» “தமிழகத்தில் பாஜக கனவு நிறைவேறாது” - செந்தில்பாலாஜி கைதுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்
» விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் அமைச்சர் செந்தில்பாலாஜி நாடகமாடுகிறார்: அண்ணாமலை குற்றச்சாட்டு
இதனிடையே, அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளில், நீதிபதி சக்திவேல் விலகியுள்ளார். அதன் விவரம் > செந்தில்பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்