கும்பகோணம்: தமிழகத்தில் வலிமையடையலாம் என்ற பாஜகவின் கனவு நனைவாகாது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் எதிரிகள் மீது அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை வேட்டை நாய்களைப் போல ஏவி விடுவது மத்திய பாஜக அரசின் வழக்கமாக இருந்து வருகிறது. அரசியல் சட்டத்தையும் மாநில உரிமைகளையும் மத்திய அரசு காலில் போட்டு மிதித்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
இது அமலாக்கத் துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். மத்திய அரசின் அராஜகத்தின் மற்றொரு வெளிப்பாடாகவே இச்செயல் அமைந்துள்ளது. இந்த கைது நடவடிக்கையும். தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனையும் எதேச்சதிகாரத்தின் உச்சமாக உள்ளது. இத்தகையை நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் வலிமையடையலாம் என்ற பாஜகவின் கனவு நனைவாகாது" என்று தெரிவித்துள்ளார்.