சென்னை: விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் அமைச்சர் செந்தில்பாலாஜி நாடகம் ஆடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்திதார்.
அப்போது பேசிய அவர், "செந்தில்பாலாஜி போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி நடைபெற்றது. உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத் துறை தனது கடமையை சுதந்திரமாக செய்து வருகிறது.மொரீஷியஸ் உட்பட வெளிநாடுகளுக்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நடவடிக்கையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எங்கிருந்து வந்தது?. செந்தில்பாலாஜி கைது நடவடிக்கையில் கடுகளவுகூட காழ்ப்புணர்ச்சி இல்லை.
யாரையும் பழிவாங்கும் எண்ணம் பாஜகவிற்கு இல்லை.செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை பாயும் என்பது முன்கூட்டியே தெரிந்தது தான். உரிய ஆதாரங்கள் இருப்பதால் தான் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் அமைச்சர் செந்தில்பாலாஜி நாடகமாடுகிறார்." என்று கூறினார்.