செந்தில்பாலாஜி மீது அமலாக்கத் துறை எடுத்துள்ள நடவடிக்கையால் இந்திய அளவில் தமிழகத்துக்கு தலைகுனிவு: புதுச்சேரி அதிமுக கருத்து

By அ.முன்னடியான்

புதுச்சேரி: அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத் துறை எடுத்துள்ள நடவடிக்கையால் இந்திய அளவில் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என புதுச்சேரி அதிமுக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, " தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் பொறுப்பற்ற தவறான பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெருந்தன்மையோடு ஒரு கண்டனத் தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றினார்.

அந்த கண்டனத் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் விதமாக கூட்டணியில் இருப்பதற்காக மற்ற கூட்டணிக் கட்சிகளின் எண்ணத்துக்கு ஏற்ப கருத்து கூறுவது பொறுத்தமற்றது என அண்ணாமலை கூறியுள்ளார். இதுபோன்று கூறும் அண்ணாமலை, கூட்டணியில் இருந்து கொண்டே பிரதான கூட்டணி கட்சியான அதிமுகவை பற்றிக் குறை கூற எந்த நியாயமும் இல்லை என்பதை உணர வேண்டும்.

திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் வலது, இடது கரமாக செயல்பட்டு வரும் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறை தற்போது எடுத்து வரும் நடவடிக்கையால் இந்திய அளவில் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தலைமை செயலகத்தில் சோதனை நடைபெற்ற போது குற்றத்துக்கான ஆதாரங்கள் தலைமை செயலாளர் அறையில் இருப்பதால் சோதனை செய்யத்தானே செய்வார்கள் என்று பேசியவர் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின். தற்போது குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர் அறையில் இருப்பதற்கு நடைபெற்ற சோதனைக்கு மாநில உரிமை பறிபோய்விட்டது. கூட்டாட்சிக்கு எதிரானது என்று அவரே கூறுவது வியப்பாக உள்ளது.

செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து இந்த ஊழல் நடைபெற்றதாக இருந்தால் ஸ்டாலின் தலைமையிலான இந்த அமைச்சரவையையும், அரசையும் மத்திய அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

இளநிலை மருத்துவ கல்வியில் இந்திய அளவில் பொது கவுன்சில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மாநில உரிமையை பறிக்கும் செயலாகும். தமிழகம் மட்டுமல்ல புதுச்சேரியிலும் இடஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு, பிராந்திய ரீதியான ஒதுக்கீடுகள் பாதிக்கப்படும்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு பாதிக்கப்படும். அதனால் தான் மாணவர்களின் நலனுனுக்காக எங்களது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த தேசிய அளவிலான மருத்தவ கவுன்சிலிங் திட்டத்தை உறுதியாக எதிர்த்துள்ளார்.

தேசிய அளவிலான பொது கவுன்சிலால் புதுச்சேரியில் மாணவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் ஆளுநர் தமிழிசை இதனால் மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் எனக் கூறுவது ஏற்புடையது அல்ல. மத்திய அரசின் இந்த மாணவர்கள் விரோத செயலை புதுச்சேரி அரசு உறுதியாக எதிர்க்க வேண்டும். முதல்வர் ரங்கசாமி உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி இதில் சரியான முடிவை எடுக்க வேண்டும். " என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE