அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலையை ஆய்வு செய்தது இஎஸ்ஐ மருத்துவக் குழு: அமலாக்கத் துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்றே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இஎஸ்ஐ மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலை தொடர்பாக ஆய்வு செய்துள்ளனர்.

சென்னை மற்றும் கரூரில் உள்ள மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் கைது செய்யப்பட்டதாகத் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியானது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடைபெற்றது. இந்த சோதனை முடிவில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதயத்துக்குச் செல்லும் 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்றே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சென்னை கே. கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையின் இருதயவியல் துறையின் 4 மூத்த மருத்துவர்கள் செந்தில்பாலாஜியின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இஎஸ்ஐ மருத்துவக் குழு அறிக்கை அடிப்படையில் அமலாக்கத் துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE