சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நள்ளிரவில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அது கைது தானா? இல்லை தடுப்புக் காவலா? என்று எதையும் இதுவரை அமலாக்கத் துறை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தாமல் இருக்கிறது. அதேபோல் தமிழக அரசுத் தரப்பிலும் இதுவரை அமைச்சர் கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருந்தால் அவர் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதும் அமலாக்கத் துறை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டால்தான் தெரியவரும்.
முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இன்று அதிகாலை (புதன்கிழமை) 2 மணி வரை சுமார் 18 மணி நேரம் அமைச்சர் செந்தில்பாலாஜி வசித்து வரும் அரசு வீடு, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினரின் சோதனை நடைபெற்றது. தொடர்ந்து நள்ளிரவில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நள்ளிரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதாகவும் அதில் சட்ட விதிமீறல்கள் இருப்பதாகவும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜியைக் காண மருத்துவமனை வந்த மூத்த அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்டோரும் கைது என்றே பேட்டியளித்தனர். ஆனாலும் கைது என்பது இதுவரை அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படாததால் குழப்பம் நிலவுகிறது.
தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இருக்கிறார். அவர் அனுமதிக்கப்பட்டுள்ள 6-வது தளத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அவரைக் காணச் சென்ற தமிழக அமைச்சர்கள் யாருமே அவரை நேரில் சந்திக்க அனுமதியளிக்கப்படவில்லை.
» பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை: செந்தில்பாலாஜி கைதுக்கு வைகோ கண்டனம்
» அமைச்சர் செந்தில்பாலாஜி கைது மனித உரிமை மீறல்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்து
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாலும், அவரைக் காண யாரும் அனுமதிக்கப்படாத காரணத்தாலும் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று விவரமறிந்தவர்கள் தரப்பு கூறுகின்றனர். மேலும் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்றைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் ஒருவேளை அவர் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மருத்துவமனைக்கு நேரில் அழைத்து வரப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் செந்தில்பாலாஜி கைது பற்றி அமலாக்கத் துறை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.