'செந்தில்பாலாஜி சுயநினைவின்றி இருக்கிறார்’ - அமைச்சர் சேகர்பாபு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலஜியை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை. நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் சென்னை - ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழக அமைச்சர் சேகர்பாபு அவரை பார்க்க மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

“அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவின்றி இருக்கிறார். அவர் மயங்கிய நிலையில் உள்ளார். அவரது பெயரை சொல்லி அழைத்த போதும் பதில் தரவில்லை. அவரது ஈசிஜி பரிசோதனை முடிவுகள் இயல்பு நிலையில் இல்லை. அவர் துன்புறுத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், அவரது தம்பி மற்றும் உதவியாளரின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடந்த இடங்களில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இந்த சூழலில் இன்று அதிகாலை 2 மணி அளவில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து அவர் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ச்சியாக 4 மணி நேரத்திற்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை அமைந்துள்ள பகுதிக்கு துப்பாக்கி ஏந்திய 50-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் வருகை தந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE