கூட்டணி கட்சி விரும்புவதை மட்டுமே நாங்கள் பேச வேண்டும் என்பது பொருத்தமற்றது: அதிமுகவுடனான மோதல் குறித்து அண்ணாமலை விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: கூட்டணி கட்சி விரும்புவதை மட்டுமே நாங்கள் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அண்மையில் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி, அவருக்கு எதிராக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக விளக்கமளித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எனது பேட்டியை சரிவர புரிந்துகொள்ளாமல் எனக்கு எதிராககருத்துகள் முன்வைக்கப்பட்டுள் ளன. அவர்களைப்போல் தரம்தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை.

பிரதமர் நரேந்திர மோடியின் வழியில், தமிழகத்தில் நேர்மையான மக்கள் நலனுக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். அந்த ஒற்றை எண்ணத்துடன் என்றுமே எனது அரசியல் பயணம் தொடரும். ஊழலின் தலைநகரம் தமிழகம் என்ற போக்கை மாற்றி ஊழலற்ற நல்லாட்சி வழங்கவேண்டும் என்பதே எனது ஒற்றை ஆசை மற்றும் லட்சியம்.

கூட்டணி தர்மம் அறிந்தவன்: கூட்டணி கட்சியையும், கூட்டணித் தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம்இல்லை. கூட்டணி தர்மத்தை நன்குஉணர்ந்தவன் நான். தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருப்பதைக் கூறியிருக்கிறேன். ஆங்கில நாளிதழுக்கு நான் கொடுத்திருந்த பேட்டியில், ஏதேனும் தவறைச் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தினால் அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

அதேசமயம், கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக கூட்டணிக் கட்சி விரும்புவதை எல்லாம் நாங்களும் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது. எனது மனசாட்சிப்படிதான் இங்கு அரசியல் செய்ய வந்துள்ளேன்.

அடுத்த 20, 30 ஆண்டுகளில், தமிழக மக்கள் வாழ்க்கை எவ்வாறு மேம்பட்டிருக்க வேண்டும் என்பதைநோக்கித்தான் எனது அரசியல் பயணம் இருக்குமே அன்றி, குறுகியகால லாப நோக்கங்களுக்காக, இன்றும் நாளையும் கிடைக்கும் தற்காலிக வெற்றிகளுக்காக, தமிழகத்தின் எதிர்காலம் குறித்த எனது கனவுகளை, கொள்கையை அடமானம் வைக்க விருப்பமில்லை.

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அறையில் அமலாக்கத் துறை சோதனை நடக்கிறது. தமிழகஅரசியலில் மலிந்திருக்கும் ஊழல், தமிழகத்துக்குக் கொண்டுவந்த மாபெரும் இழிவு, வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத அவல நிலைஇது. இந்த அரசியல் போக்கைத்தான் மாற்ற விரும்புகிறேன்.

நேர்மையான அரசியலை, நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்த்து வெகுகாலம் காத்துக் கொண்டிருந்த நம் மக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி, அரசியல் மேல் நம்பிக்கையை மீட்டுக் கொடுத்திருக்கிறது. ஊழலற்ற அரசு சாத்தியம் என்பதை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை வீண் போகாது,

தமிழகத்தில் ஊழலற்ற, மக்கள் நலன் ஒன்றே சார்ந்த அரசு அமையும். அதை நோக்கியே எங்கள் அரசியல் பயணமும் தொடரும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE