புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடியே கிடக்கும் இ-டாய்லெட்டை திறந்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்துக்கு பல்வேறு பணிகள் தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் ஏராளமானோர் தினமும் வந்துசெல்கின்றனர். இவர்களுக்கு வசதியாக அங்கு கழிப்பறை இல்லை. இதனால், பொதுவெளியையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2021-ம் ஆண்டில் புதிதாக இ-டாய்லெட் கட்டப்பட்டது.
ஆனால், தானியங்கி வசதியுடன்கூடிய இந்த புதிய கழிப்பறை திறக்கப்படாமல், கடந்த 2 ஆண்டுகளாக மூடியேக் கிடக்கிறது. இவ்வாறு ஆண்டுக் கணக்கில் பயன்படுத்தாமல் விடப்படுவதால், அதில் உள்ள கருவிகள் பழுதடைய வாய்ப்பு உள்ளது. எனவே, உடனடியாக இ-டாய்லெட்டை திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.