சென்னை: மருத்துவப் படிப்புக்கான மத்திய அரசின் பொதுக் கலந்தாய்வு கொள்கையை ஒருபோதும் தமிழகத்தில் கொண்டுவர விடமாட்டோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை மருத்துவக் கல்லூரியின் 187-வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "பொதுக் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியானதும், மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. மாநிலங்களின் பங்களிப்பை குறைப்பது என்று பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு, பொதுக் கலந்தாய்வு ஏற்புடையதல்ல என கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. மாநில உரிமைகளை மீறும் வகையிலான அறிவிப்புகள் ஏற்புடையதல்ல. அனைத்து தரப்பிலும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பொதுக் கலந்தாய்வு நடத்தப்பட்டால் அதனை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டுள்ளது. கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா முடிந்ததும் 16,17,18 ஆகிய தேதிகளில் டெல்லி சென்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். பொதுக் கலந்தாய்வு நடந்தால் மாணவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு சலுகைகளும் பாதிக்கப்படும்.
மத்திய கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாநிலமான ஒடிசாவிலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் என்பதால் செயல்படுத்தியதாக அவரே தெரிவித்தார். தற்போது நீட் தேர்வுக்கு அரசு சார்பில் மேற்கொண்டு வரும் சட்ட போராட்டங்களை போல பொது கலந்தாய்வுக்கும் சட்ட போராட்டம் நடத்தப்படும். மருத்துவக் கல்வியில் பொதுக் கலந்தாய்வு என்பது இந்த வருடம் இல்லை. அடுத்த வருடத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.பொதுக் கலந்தாய்வு கொள்கையை ஒருபோதும் தமிழகத்தில் கொண்டுவர விடமாட்டோம்" என்று அவர் கூறினார்.