சென்னை: லாலு பிரசாத் ஒரு சமரசமற்ற சமூகநீதிப் போராளி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதுபெரும் அரசியல் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவருமான லாலு பிரசாத்தின் பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், முதுபெரும் அரசியல் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவருமான லாலு பிரசாத்துக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். மனிதர்களின் மரியாதைக்கு (izzat) அவர் அளித்த முக்கியத்துவமானது அவரது அரசியலை தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்துக்கு மிக நெருக்கமானதாக்குகிறது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடானாலும், சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காகக் குரல் கொடுப்பதானாலும், மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவதானாலும் தாம் எடுத்த மாறுபாடற்ற உறுதியான நிலைப்பாடுகளால் லாலு பிரசாத் ஒரு சமரசமற்ற சமூகநீதிப் போராளியாகத் திகழ்கிறார். அவரது 76-ஆவது பிறந்தநாளில், மேலும் பல்லாண்டுகள் அவர் மக்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வட இந்தியாவில் மண்டல் அரசியலை வலுப்படுத்த வேண்டும் என வாழ்த்துகிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.