சிவகங்கை அரசு மருத்துவமனை ‘லிப்டில்’ சேதம் - சீரமைக்க கோரிக்கை

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லிப்டில் ஆபத்தான முறையில் ஓட்டை உள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 1,200-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வருகின்றனர். 800-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக உள்ளனர். வார்டுகள் தரைத்தளம் முதல் 2-ம் தளம் வரை 3 தளங்களிலும் உள்ளன. மேல்தளங்களுக்கு நோயாளிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் சென்று வர 7 லிப்ட்கள் உள்ளன.

இதில் ஒருசில மட்டுமே இயங்குகின்றன. இதுதவிர உணவு, மருத்துவப் பொருட்கள் கொண்டு செல்ல அமைக்கப்பட்ட லிப்ட்டும் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் முதல்தளத்தில் பெண்கள் வார்டு பகுதியில் உள்ள பழுதடைந்த லிப்ட்டில் கதவு சேதமடைந்து, ஆபத்தான முறையில் ஓட்டை உள்ளது. எதிர்பாராத விதமாக குழந்தைகள் லிப்டை நோக்கி சென்றால் ஓட்டை வழியாக கீழே விழும் அபாயம் உள்ளது. பெரியவர்களுக்கும் கால்கள் சிக்கி கொள்ள வாய்ப்புள்ளது.

ஆபத்தான முறையில் உள்ள லிப்டை சீரமைக்க வேண்டும். பழுதடைந்த மற்றவற்றை சீரமைத்தும், நல்ல நிலையில் உள்ளவைக்கு ஆப்பரேட்டர்களை நியமித்து இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE