தாம்பரம் | ரோந்து பணியின்போது இலவசமாக ஜூஸ், பிரட் ஆம்லெட் கேட்டு தகராறு: 4 பெண் போலீஸார் பணியிடை நீக்கம்

By செய்திப்பிரிவு

படப்பை: தாம்பரம் அருகே படப்பையில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் பிரட் ஆம்லெட், சாக்லேட், ஜூஸ் போன்றவற்றை இலவசமாக கேட்டு தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் உட்பட 4 பெண் போலீஸாரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தாம்பரம் அருகே படப்பை பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் போலீஸார், அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற ஜூஸ், பிரட் ஆம்லெட், சாக்லேட், குடிநீர் கேன்கள் போன்றவற்றை வாங்கிக்கொண்டு அதற்கான பணம் தர மறுத்துள்ளனர்.

இதற்கு கடையின் ஊழியர் எதிர்ப்பு தெரிவித்தள்ளார். இதனால், அவர்கள் கடை ஊழியரிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. கடையின் உரிமத்தை ரத்து செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. இது கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவானது. அந்த காட்சிகளை கடையின் உரிமையாளர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாக பரவியது.

அதில் கடை ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவதும், கடையின் உரிமையாளருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஓசியில் ஜூஸ் கேட்டு மிரட்டுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதுகுறித்து விசாரணை நடத்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

இதையடுத்து, 4 பெண் போலீஸாரையும் பணியிடை நீக்கம் செய்து ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE