மக்களுக்கு தரமான உணவை உறுதி செய்ய இணையதளம், செல்போன் செயலி: உணவு பாதுகாப்புத் துறை தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களைத் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார்கள் பெறப்பட்டு 72 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதை மேம்படுத்தும் விதமாகதற்போது foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் கைபேசி செயலியான TN Food Safety Consumer App அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த இணையதளம், எளிய முறையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளிலும், மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் ஸ்க்ரீன் ரீடர் வசதிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவு பாதுகாப்புத் துறை மூலம் நுகர்வோர் குறைதீர்ப்பு செயலியில், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யின் மறு பயன்பாடு, உணவு செறிவூட்டல் ஆகியவை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த குறும்படங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் உணவு பாதுகாப்புதுறையால் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு செயலி ஆகிய சேவைகளை பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE