புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஜூன் 14-க்கு தள்ளிவைப்பு: முதல்வர் ரங்கசாமி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியிலும் தமிழகத்தைபோல் பள்ளிகள் திறப்பு ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டு வரும் 14-ம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. கடந்த மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கி கடந்த 29-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த காலத்தில் புதுவையில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. கடந்த 16-ம் தேதி அதிகபட்மசமாக 106.16 டிகிரி வெப்பம் பதிவானது.

கத்திரி வெயில் முடிந்து ஒரு வாரமாகியும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. நாள்தோறும் அனல் காற்றுடன் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.

கடந்த சில நாட்களாக வெப்பத்தின் அளவு 100 டிகிரியை தாண்டியுள்ளது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர். வீடுகளில் முடங்கினாலும் அடிக்கடி மின்தடையால் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் பள்ளித்திறப்பு வரும் 7ம் தேதி என தள்ளிவைக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதுபற்றி முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்" என்றார்.

அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தருகிறார்களா-எம்எல்ஏ நேரடியாக குற்றம் சாட்டுகிறாரே என்று கேட்டதற்கு, "எம்எல்ஏ குறைகளை தெரிவித்துள்ளார். கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். அவர் தொகுதி பிரச்சினைகளை தெரிவித்தார். புதுச்சேரியில் நல்ல ஆட்சி நடத்த வேண்டும், சிறப்பாக செயல்படுத்த அரசு எண்ணம். அதற்கு ஏற்றாற்போல் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். குறைகளை எம்எல்ஏக்கள் வலியுறுத்துகிறார்கள்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE