தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு: கடும் வெயில் காரணமாக அரசு நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கடுமையான வெயில் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 12 ஆம் தேதியும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன்14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், அதிகாரிகள் ஆகியோரும் ஆலோசனை நடத்தினர். அதில் வானிலை ஆய்வு மையம் இன்னும் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை முன்வைத்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் கடுமையான வெயிலை கருத்தில் கொண்டு முதல்வர் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 1 கோடி மாணவர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவது முறை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் கல்வியாண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

அதன்பின், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அனைத்து வகுப்புகளும் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதற்கேற்ப அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் தாக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்தச்சூழலில் பள்ளிகளை திறப்பது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, பள்ளி திறப்பை மேலும் தள்ளிவைக்க வேண்டும். குறைந்தது தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்காவது விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பதிவு செய்து வந்தனர், இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE