தமிழகத்தில் 2 நாட்களுக்கு 106 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் (ஜூன் 3, 4) 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் மேற்கு திசைக் காற்று வீசுவதாலும், வெப்பச் சலனம் காரணமாகவும் இன்று முதல் 4 நாட்களுக்கு (ஜூன் 3, 4, 5, 6) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி முதல் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

ஜூன் 2-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சூளகிரியில் 4 செ.மீ., ராணிப்பேட்டை, கரூர், சின்னாறு அணை ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வரும் 6-ம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE