தெலங்கானா ஆளுநர் தமிழிசை பிறந்த நாள் - பிரதமர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் 63-ம் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடி: பிறந்தநாள் என்பது மனித சமுதாயத்துக்கும், தேசிய விழுமியங்களுக்கும் அர்ப்பணித்துக் கொள்வதை மீண்டும் நினைவுபடுத்தும் ஒரு சிறப்பான சந்தர்ப்பம். இந்த விழுமியங்களை ஒன்றுபடுத்த சாமானியர்களின் எதிர்பார்ப்புகளைச் சமாளித்து நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.

ஆளுநராக உங்களது அரசியல் சாசனக் கடமைகளை ஆற்றும் செயல்திறனும், கடமை உணர்வும், மாநிலத்தை மேலும் உயரத்துக்கு இட்டுச்செல்லும். சமுதாயத்துக்கும், மாநிலத்துக் கும், தேசத்துக்கும் நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்போடு சேவை செய்வீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கவும், தேச சேவையில் உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான சகோதரி தமிழிசை சவுந்தரராஜனுக்கு எனது அன்புமிகு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: பொதுப்பணி சிறந்து, பூரண உடல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தொடர்ந்து நாட்டுப் பணியாற்றும் வகையில், உங்களுக்கு ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் இறைவன் அருள்வாராக.

பாமக தலைவர் அன்புமணி: சகோதரி தமிழிசை சவுந்தர ராஜனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளு டனும் பொதுப்பணியாற்ற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE