பட்டாசு ஆலைகளை தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: பட்டாசு ஆலைகளை தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் அங்கு பணி செய்த 8 பேரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன், மேலும் 4 பேர் கவலைக் கிடமான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்கள் எனத் தகவல் அறிந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் சமீப காலமாக பட்டாசு ஆலை விபத்துக்கள் தினசரி செய்தியாகி வருகின்றது , ஆகவே இந்த விடியா அரசு பட்டாசு தொழிற்சாலைகள், குடோன்கள் ,அரசு நிர்ணயித்த விதிகளை உரிய முறையில் அந்த பட்டாசு தொழிற்சாலைகள் பின்பற்றுகின்றனவா என்பதை தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்குவதுடன், உடல் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோருக்கு உயரிய சிகிச்சையும் அவர்களுக்கும் உரிய நிவாரண உதவிகளையும் உடனடியாக வழங்கிட வேண்டுமென இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE