முடக்கப்பட்ட சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்குகளை மீட்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: முடக்கப்பட்டுள்ள சீமான், திருமுருகன் காந்தி ஆகியோர்களின் ட்விட்டர் கணக்குகளை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு முருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

இக்கணக்குளை முடக்க சட்ட கோரிக்கை வந்ததாக ட்விட்டர் நிர்வாகம் கூறுகின்றது. தமிழ்நாடு காவல்துறை இப்படிப்பட்ட கோரிக்கை வைக்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் செயல்கள் ஏராளமாக நடந்துள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் பின்னணி இவை அனைத்திற்கும் உண்டு என்பதை உலகமறியும்.

தற்போதைய ட்விட்டர் கணக்கு முடக்கத்திற்கும் இப்பின்னணி உள்ளதா? எனக் கேள்வி உள்ளது. உடனடியாக இத்தடைகளை நீக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகின்றது" என முத்தரசன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE