பனகல் அரசரின் 3 மைல்கல் சாதனைகள்!

By ஆர்.சி.ஜெயந்தன்

சென்னைப் பெருநகரின், தியாகராய நகர் இன்று முக்கிய ‘ஷாப்பிங் ஏரியா’வாக புகழ் பெற்று விளங்குகிறது. குறிப்பாக பனகல் பூங்கா அதன் மையமாக அமைந்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பூங்காவைப் பல்லடுக்கு வாகன நிறுத்தமாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்தபோது மக்கள் எதிர்ப்பால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இன்று சென்னை பெருநகராக மாறிய நிலையில் ‘மெட்ரோ’ ரயிலின் தேவை அதிகரித்துவிட்டதால், பனகல் பூங்காவை மெட்ரோ நிலைய முனையமாக மாறுகிறது. அதற்கும் பனகல் மெட்ரோ என்றே பெயரிடுகிறார்கள். எத்தனை மாற்றங்களை எடுத்தாலும் பனகல் என்கிற பெயர் என்றைக்கும் மாறப்போவதில்லை. காரணம், பனகல் அரசரின் தரமான செயல் அப்படி!

சுதந்திரத்துக்கு முந்தைய சென்னை ராஜதானி அல்லது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் பிரதமராக (முதல்வர்) பதவியேற்றுச் சிறப்பான ஆட்சியை வழங்கியவர். ஜூலை 9ஆம் தேதியான இன்று அவருக்குப் பிறந்த நாள். ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் நீதி கட்சி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், அப்போதைய முதலமைச்சர் சுப்பராயலு உடல்நிலை காரணமாகப் பதவி விலகினார். இதையடுத்து ஏப்ரல் 11, 1921 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் பனகல் அரசர்.

சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள ‘பனகல்’ மாளிகை

அவர் பதவியேற்றதும் பல சீர்த்திருந்தங்களை அரசு ஆணையாக நிறைவேற்றி அதிரடி காட்டினார். அப்போது மருத்துவப் படிப்பு படிக்கவேண்டுமானால் சம்ஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. இதைப் புரட்டிப் போட்டார் பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர். ‘மருத்துவம் பயில சம்ஸ்கிருதம் கற்றிருக்கத் தேவையில்லை’ என்று அரசு ஆணை பிறப்பித்தார். இதனால், மருத்துவப்படிப்பில் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருந்த மேட்டுக்குடி வர்க்கத்தினர் இதைக் கடுமையாக எதிர்த்தனர். எதிர்ப்பு எதனையும் சிறிதும் பொருட்படுத்தவில்லை பனகல் அரசர். சம்ஸ்கிருதம் அறிந்தவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பு சாத்தியம் என்றிருந்த நிலையில் அனைத்து வர்க்கத்தினரும் மருத்துவராகும் வாய்ப்பை உருவாக்கினார்.

பனகல் அரசரின் மற்றொரு மைல்கல் சாதனை அரசர்கள் கட்டி பரிபாலனம் செய்து வந்த கோயில் சொத்துக்களை ஒருசில குடும்பங்களைச் சேர்ந்தவர்களே பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வந்தனர். அதைத் தடுக்கும் வகையில் கோயில்களுக்கென தனித் துறையை உருவாக்கி, இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இந்து அறநிலையச் சட்டத்தை இயற்றினார். இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் பனகல் அரசர் அசைந்து கொடுக்கவில்லை.

பனகலாரின் மூன்றாவது அதிரடி அரசுப் பணிகளில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கான ஆணையைப் பிறப்பித்து அதை நடைமுறைப்படுத்தினார். நகர விரிவாக்கத்துக்காகத் தியாகராய நகரை உருவாக்கியவரும் இவர்தான். ஆங்கிலேய ஆளுநர்கள் பெரும்பாலான அதிகாரங்களைத் தங்கள் வசம் வைத்திருந்த காலத்திலேயே இத்தனை சாதிக்க முடிந்த பனகல் அரசரை நினைவு கூறவே தியாகராய நகரில் பனகல் பூங்காவும் சைதாப்பேட்டையில் பனகல் மாளிகை அரசு பல்லடுக்கு அலுவலகமும் அவரது பெயரைத் தாங்கி நிற்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE