ஐஐடி மாணவர்களின் ‘ஏஐ ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சி!

By செய்திப்பிரிவு

இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமாகிவிட்டது. எனினும் பள்ளி குழந்தைகள் பலர் சரளமாக ஆங்கிலம் பேசத் தடுமாறுகின்றனர். பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம் பேசி பழக சரியான வாய்ப்பு அமையாதது இதற்கு ஒரு முக்கியக் காரணம். இந்த நிலையை மாற்றக் குழந்தைகளுக்கு ’ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சி வகுப்புகளுக்கு பெற்றோர் அனுப்பவதுண்டு. தற்போது ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்பில் புதுமையைப் புகுத்தியுள்ளனர் சென்னை ஐஐடி மாணவர்கள் சிலர்.

வழக்கமான ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்பாக அல்லாமல் செயற்கை நுண்ணறிவு (Artificial Intellegence - ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சென்னை ஐஐடி மாணவர்கள் புதிய ’ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்பை உருவாக்கியுள்ளனர். ஐஐடி மாணவர் மகரிஷி, அவருடைய நண்பர்கள் சேர்ந்து தொடங்கிய ‘சூப்பர் நோவா’ என்ற நிறுவனம் குழந்தைகளுக்கான கல்வி சம்பந்தமான தகவல்களை உள்ளடக்கிய சேவையை வழங்கிவருகிறது. ஆங்கிலம் கற்றுத் தருவதற்கென இவர்கள் பிரத்தியேகமாக ஒரு செயலியையும் உருவாக்கியுள்ளனர்.

‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சி பெறுபவர்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்தும்போது ஒரு தேர்ந்த ஆங்கில ஆசிரியருடன் உரையாடுவதைப் போலவே இருக்கும். அதற்கேற்ப வகுப்புகளை வடிவமைத்துள்ளனர். இதனால் ஆங்கில மொழியைப் பேசிப் பழகுவது எளிதாகிறது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இச்செயலியைப் பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளை நிறைவு செய்துள்ளனர்.

புதுமையான இந்த ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சி வகுப்புக்கு குறைந்த அளவிலான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இப்பயிற்சியைப் பெற விருப்பமுள்ளவர்கள் 81518-92593 என்கிற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்புகொண்டு பயன் பெறலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE