நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கு மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடத்தப்படும் அறிவியல் பாடங்களுக்கான நெட் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பக் காலம் முடிவடைய உள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வு ஜூன் 6,7,8 ஆகிய தேதிகளில் கணினி வழித் தேர்வாக நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு ஏப்ரல் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://csirnet.nta.nic.in/ இல் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் ஏப்ரல் 12 முதல் 18 வரையிலான தேதிகளில் மேற்கொள்ளலாம்.
இணையவழி விண்ணப்பப்பதிவின்போது விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்கள், முகவரி, தேவையான ஆவணங்கள், ஒளிப்படம், டிஜிட்டல் கையெழுத்து ஆகியவற்றைப் பதிவு செய்து இறுதியில் கட்டணம் செலுத்த வேண்டும். பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.1100 விண்ணப்பக் கட்டணமும் இடபிள்யூஎஸ், ஓபிசி, என்சிஎல் பிரிவினர் ரூ. 550 கட்டணமும், எஸ்.சி, எஸ்.டி, மூன்றாம் பாலினத்தவர் ரூ. 275 கட்டணமும் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும் இத்தேர்வின் வினாத்தாள்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் இருக்கும். தேர்வில் வெற்றிபெற குறைந்தது 40 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s3efdf562ce2fb0ad460fd8e9d33e57f57/uploads/2023/03/2023031181.pdf