40 ஆயிரம் காலிப்பணியிடங்கள்… அஞ்சல் துறையின் மெகா அறிவிப்பு!

By ராகா

இந்திய அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் கிராம அஞ்சல் பணிகளுக்கு ஆட்கள் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள 40,889 காலிப்பணியிடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முக்கிய தேதிகள்: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் பிப்ரவரி 16ஆம் தேதிக்குள் இணைய வழியில் மட்டும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் ஏதேனும் இருந்தால், பிப்ரவரி 17 - 19 தேதிக்குள் சரி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதி: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் ஆங்கிலம், கணிதப் பாடங்களில் கண்டிப்பாகத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். கூடுதலாக விண்ணப்பதாரருக்கு மிதிவண்டி ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்: கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM – Branch Postmaster BPM) பதவிக்கு ரூ. 12,000 முதல் 29,380 வரை ஊதியமும், உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர் (Assistant Branch Postmaster - ABPM / Dak Sevak) பதவிகளுக்கு ரூ. 10,000 முதல் 24,470 வரை ஊதியமும் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இதுகுறித்த விரிவான தகவல்களுக்கு இந்திய அஞ்சல் துறை இணையதளத்தைப் பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களைச் சரியாகப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100ஐ செலுத்த வேண்டும். பட்டியல், பழங்குடி பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

மேலும் விவரங்களுக்கு: https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE