'தி டெக் ஃபீனிக்ஸ்: சத்யம்ஸ் 100 டேஸ் டர்ன்அரவுண்ட்' என்கிற பிரபல புத்தகம் தற்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ விருது பெற்ற டி.என்.மனோகரன், பட்டயக் கணக்காளர், கல்வியாளர் வி. பட்டாபி ராம் ஆகியோர் ஆங்கிலத்தில் எழுதிய இந்தப் புத்தகத்தை எழுத்தாளர்கள் ராணி மைந்தன், லலிதா பரமேஸ்வரி ஆகியோர் தமிழில் மொழி பெயர்த்துள்ளனர். இந்தப் புத்தகத்துக்கு இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் அணிந்துரை எழுதியுள்ளார். 'சத்யம் கம்ப்யூட்டர்ஸின் மறுபிறப்பு: 100 நாட்களில் மீட்டெடுத்த கதை’ என்கிற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட, இந்தப் புத்தகத்தை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சத்யம் ஊழல் குறித்த செய்தி இந்தியாவை உலுக்கியது. அப்போதைய மத்திய அரசு இந்த ஊழல் குறித்து விசாரிக்க நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் டெக் மகேந்திரா நிறுவனம் சத்யம் நிறுவனத்தின் பங்குகளைப் பெற்றது. சத்யம் ஊழல் வெளிச்சத்துக்கு வந்த நாள் முதல் அடுத்து 100 நாள்களில் சரிவிலிருந்த அந்த நிறுவனத்தை மீட்டது எப்படி, அந்த 100 நாள்களில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு ஆகியவை இந்தப் புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ‘கார்போரண்டம் யுனிவர்ஸ் லிமிடெட்’ தலைவர் எம்.எம்.முருகப்பன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர். சுதா சேஷய்யன் ஆகியோர் உள்பட இன்னும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்தப் புத்தகம் அமேசான் தளத்திலும் அனைத்துப் புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.