மார்க்கெட்டிங் முதல் ஏஐ வரை: கூகுளின் பயிலரங்கு

By செய்திப்பிரிவு

தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள், ‘Grow with Google’ என்கிற தளத்தை இயக்கி வருகிறது. இதில், மார்க்கெட்டிங், சைபர் பாதுகாப்பு, தரவு மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), வரைகலை வடிவமைப்பு போன்ற பாடங்களுக்கு இணையவழியில் மட்டும் பயிற்சி வழங்குகிறது. இப்பயிற்சியை நிறைவு செய்பவருக்குச் சிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஏன் கூகுள்?

கூகுள் வழங்கும் இப்பயிற்சியைப் பெற ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பயணிக்கத் தேவையில்லை. இருக்கும் இடத்திலிருந்தே திறன்பேசி அல்லது கணினியின் வழியே இணைய வழியில் இப்பயிற்சியைப் பெறலாம். ஒவ்வொரு பாடப்பிரிவும் ஆரம்ப நிலை, ஓரளவு கடினமான நிலை, மிகக் கடினமான நிலை என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு மார்க்கெட்டிங் பாடத்தைப் படிக்க வேண்டுமெனில், உங்களது அனுபவத்துக்கேற்ப நிலையைத் தேர்வு செய்து பயிற்சியைப் பெற்றுக்கொள்ளலாம்.

தகுதி, வயது வரம்பு: இப்பயிற்சியைப் பெற வயது வரம்பு கிடையாது. கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர், தொழில் முனைவோர் என விருப்பமுள்ள யாவரும் இப்பயிற்சியைப் பெறலாம்.

பயிற்சி விவரம்: கூகுள் வழங்கும் பயிலரங்கு களில் சில பாடங்களுக்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை, சிலவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயிற்சிக்கான நேரத்தை பயனர் அவரவர் விருப்பத்துக்கேற்ப ஒதுக்கிக் கொள்ளலாம். 10 மணி நேரப் பாடமெனில், அதைப் பிரித்து பங்கெடுத்து நேரம் கிடைக்கும்போது பயிற்சியை முழுவதுமாக நிறைவு செய்யலாம். இதனால் எங்கிருந்தும், எப்போதும் பாடங்களைப் படிக்க முடியும். பயிற்சியை நிறைவுசெய்பவருக்குச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: பயிலரங்கில் பங்குபெற ஆர்வம் உள்ளவர்கள் கூகுளின் அதிகாரபூர்வ இணையதளத்தில், ‘Grow with Google’ என்கிற இணைப்பில் (https://grow.google/intl/en_in/) விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு கூகுள் தளத்தைப் பார்வையிடவும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE