‘பிரித்து’ப் பயன் பெறுக

By செய்திப்பிரிவு

கல்வி முதல் பொழுதுபோக்கு வரை சகலமும் திறன்பேசியினுள் அடங்கிவிடுகிறது. எந்நேரமும் கையில் திறன்பேசியோடுதான் இன்றைய தலைமுறையினரைப் பார்க்க முடிகிறது. இதில், பெரும்பாலானோரது நேரத்தைச் சுரண்டக்கூடியது சமூக வலைதளங்கள்தான். நேரத்தைச் சுரண்டும் போக்கு இருப்பதால் மட்டுமே சமூக வலைதளங்களை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சொல்ல முடியாது. இத்தளத்தைப் பயனுள்ளது, பயனற்றது எனப் பிரித்துப் பார்த்துப் பயன்படுத்தும்போது இது ஒரு நல்ல நவீன கற்றல் தளமாகவும் மாறக்கூடும். சமூக வலைதளத்திலேயே முழுவதும் மூழ்கிவிடாமல், இதற்கென்று நேரத்தை ஒதுக்கி ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம்.

என்ன செய்யலாம்?

தகவல் களஞ்சியம்

வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், யூடியூப் எனச் சமூக வலைதளங்களில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. மொழி, அறிவியல், தொழில்நுட்பம், கலை எனப் பல துறை சார்ந்து கிடைக்கும் தகவல்களில் உண்மை எது? பொய் எது? எனப் பிரித்துப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பொய்த் தகவல்களைப் பகிர்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.

பகிர்தல்

எழுத்து, பேச்சு, பாட்டு, நடனம், விளையாட்டு என மாணவர்களின் தனித்திறனை வெளிக்காட்ட சமூக வலைதளம் ஒரு சிறந்த தளம். படித்துக் கொண்டிருக்கும்போதே படைப்பாளி களாக உருவாகும் மாணவர்கள், கூடுதலாக வேறொரு துறையிலும் தங்களை வளர்த்துக்கொள்ள முடியும். போட்டி மிகுந்த இக்காலத்தில் சமூக வலைதளத்தில் எழும் நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களைச் சரியாகப் பகுப்பாய்வு செய்து தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். சுய விமர்சனம் செய்து தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு

இணையப் புரட்சியால் கடல் தாண்டியும் தகவல் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. அது போல, லிங்க்டு இன் (LinkedIn) போன்ற சமூக ஊடக வழியே நாடு கடந்தும் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். அதுமட்டுமன்றி, சமூக வலைதள நிர்வாகி, மேலாளர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனச் சமூக வலைதளத்தைச் சார்ந்தே பல வாய்ப்புகள் இருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE